×

தேவர்குளம் அருகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

நெல்லை, ஆக.3: தேவர்குளம் அருகே வன்னிகோனேந்தலில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. நெல்ைல மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள வன்னிகோனேந்தலைச் சேர்ந்தவர் பாலமுருகன்(53). பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் பால்துரை (38). இவர்கள் இருவரும் வன்னிகோனேந்தலில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் இவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து கடைக்குள் செல்ல முயன்ற டாஸ்மாக் ஊழியர்களை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் காயம் அடைந்த பாலமுருகன், பால்துரை ஆகிய இருவரும் கூச்சல் போடவே மற்ற ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த இருவரும் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு ஏஐசிசிடியு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில தலைவர் சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வன்னிகோனேந்தல் டாஸ்மாக் கடையில் இரவு 9 மணிக்கு பணியில் இருந்த விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளரை தாக்கியும், அரிவாளால் வெட்டியும் காயப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இத்தகைய தாக்குதலில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவர்குளம் அருகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Devarkulam ,Nellai ,Vannikonendhal ,Devarkulam, Nelayla District ,Dinakaran ,
× RELATED மனைவியை மிரட்டிய கணவன் கைது